Wed, Aug 05, 2026 02:33 AM

ஏ. விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

Posted by admin on 24-06-2026


ஏ. விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

மழை வேண்டி மானாமதுரையில் கோலாகலம்: ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் கிராமத்தில், பருவமழை தவறாமல் பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஆண்டுதோறும் புரவி எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
​இவ்விழாவை முன்னிட்டு, ஏ.விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கிராமத்திலிருந்து ஊர்வலமாக மானாமதுரைக்கு வருகை தந்தனர். அங்குள்ள வேளார் தெருவில், மண்ணால் நேர்த்தியாகச் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த புரவி (குதிரை) மற்றும் காளை பொம்மைகளுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பூஜைகள் முடிந்த பின், அங்கிருந்து சுவாமி சிலைகள் மற்றும் பொம்மைகள் ஊர்வலமாகப் புறப்பட்டு ஏ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தில்
​7 மாபெரும் குதிரை பொம்மைகள் மற்றும் 6 காளை பொம்மைகள் கொண்டு செல்லப்பட்டனர்.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாகப் பல்வேறு பொம்மைகளைத் தலையில் சுமந்து சென்றனர்.குறிப்பாக, திருமண வரம் மற்றும் குழந்தை வரம் வேண்டி நேர்ந்துகொண்ட பெண் பக்தர்கள், தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்காக நேர்த்திக்கடன் பொம்மைகளை ஏந்தி பக்திப் பெருக்குடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஆடிப்பாடி மகிழ்ந்த இளைஞர்கள்:
கேரளா செண்டை மேளம் மற்றும் ட்ரம்ஸ் வாத்தியங்களின் அதிரடி இசைக்கு ஏற்ப, கிராமத்து இளைஞர்களும் பெண்களும் ஆடிப்பாடி உற்சாகமாகக் குதிரைகளை எடுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் இந்த ஆன்மீகப் பேரணியைக் கண்டு வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

Share: 1,434 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.