Wed, Aug 05, 2026 05:33 AM

காரைக்குடியில் கனிமவளத்துறை அமைச்சர் வீடு அருகே போலீசார் குவிப்பு

Posted by admin on 18-07-2026


காரைக்குடியில் கனிமவளத்துறை அமைச்சர் வீடு அருகே போலீசார் குவிப்பு

காரைக்குடியில் கனிமவளத்துறை அமைச்சர் வீடு அருகே போலீசார் குவிப்பு: குவாரி எதிர்ப்பு போராட்டம் காரணமாக பரபரப்பு.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா குளவாய்ப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய குவாரி அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் கனிம வளத் துறை அமைச்சர் டாக்டர் பிரபுவின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காரைக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குளவாய்ப்பட்டி கிராம மக்கள், தங்களது பகுதியில் ஏற்கனவே இயங்கி வரும் குவாரியால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் புதிய குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், புதிய குவாரி உரிமத்தை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து, குளவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்  காரைக்குடியில் உள்ள கனிம வளத் துறை அமைச்சர் டாக்டர் பிரபுவின் இல்லத்தையும் கட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் (ASP) ஆஷிஷ் புனியா தலைமையில், முடியரசனார் சாலையில் அமைந்துள்ள அமைச்சர் இல்லம் மற்றும் கட்சி அலுவலகம் செல்லும் முக்கிய வழித்தடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர் இல்லம் மற்றும் கட்சி அலுவலகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கிராம மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Share: 1,189 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.