Wed, Aug 05, 2026 02:36 AM

சூரப்பட்டி தடுப்பணை விவகாரம்: சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

Posted by admin on 16-07-2026


சூரப்பட்டி தடுப்பணை விவகாரம்: சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

சூரப்பட்டி தடுப்பு அணை விவகாரம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சிங்கம்புணரி வட்டாச்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளை வெளியேற விடாமல் விவசாயிகள் அறப்போராட்டம். உடன்பாடு எட்டப்படாததால் வரும் 30ஆம் தேதி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை.


மதுரை மாவட்டம் சூரப்பட்டியில் பாலாறு குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பு அணை தொடர்பான விவகாரத்தில், சிங்கம்புணரி பாலாறு பாசன விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து மற்றும் படுத்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் சூரப்பட்டியில் ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் 6 அடி உயரத்தில் தடுப்பு அணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்புஅணையால் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில்  100 கிராமங்களில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் குடிநீர் பாதிக்கப்படும் என கூறி தடுப்பணை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கம்புணரி பாலாறு பாசன விவசாய கூட்டமைப்பினர் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இடையே ஏற்கனவே மூன்று முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில்  இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தென் மண்டல நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஷ்யாம் எர்வின் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், விவசாயிகள் தரப்பில் அணையின் உயரத்தை 3 அடியாக குறைத்து கட்டுவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், வட்டாட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்தும் படுத்தும் சுமார் 3 மணி நேரம் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரிகள் அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத சூழலும் ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 30-ஆம் தேதி மதுரை–சென்னை நான்கு வழிச்சாலையில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share: 968 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.