Wed, Aug 05, 2026 02:36 AM

உஞ்சனை அங்கன்வாடி மையத்தைச் சுற்றி கழிவுநீர் தேக்கம்

Posted by admin on 13-07-2026


உஞ்சனை அங்கன்வாடி மையத்தைச் சுற்றி கழிவுநீர் தேக்கம்

உஞ்சனை அங்கன்வாடி மையத்தைச் சுற்றி கழிவுநீர் தேக்கம் – குழந்தைகளுக்கு தொற்றுநோய் அபாயம்; உடனடி நடவடிக்கை கோரி பெற்றோர் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உஞ்சனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால், அங்கு வரும் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த அங்கன்வாடி மையத்திற்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் மைய வளாகத்தைச் சுற்றி தேங்கிய மழைநீர், காலப்போக்கில் கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.

தேங்கியுள்ள நீரில் கொசுக்கள் பெருகும் சூழல் உருவாகியுள்ளதால், குழந்தைகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், குழந்தைகள் விளையாடும் மற்றும் நடமாடும் இடங்களுக்கு அருகிலேயே கழிவுநீர் தேங்கியிருப்பது பாதுகாப்பு மற்றும் சுகாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றி, மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, அங்கன்வாடி மைய வளாகத்தை சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share: 20 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.