Wed, Aug 05, 2026 07:02 AM

"குப்பை கொட்டினால் செய்வினை!" – இளையான்குடியில் வினோத பலகை

Posted by admin on 01-07-2026


"குப்பை கொட்டினால் செய்வினை!" – இளையான்குடியில் வினோத பலகை

"குப்பை கொட்டினால் செய்வினை!" – இளையான்குடியில் வினோத பலகை; பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பாரதியார் தெருவில் வைக்கப்பட்டுள்ள ஒரு வினோத எச்சரிக்கை பலகை, பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த பலகையில், "குப்பை கொட்டினால் செய்வினை செய்யப்படும்" என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இளையான்குடி பகுதியில் சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சிலர் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குப்பை கொட்டுவதைத் தடுக்க பலமுறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், சிலர் அதை பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த யாரோ ஒருவர், வழக்கமான எச்சரிக்கை வாசகங்களுக்கு பதிலாக வித்தியாசமான முறையில் இந்த பலகையை வைத்திருக்கலாம் என அப்பகுதியினர் கருதுகின்றனர். ஆனால், இந்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட்ட பின்னரும் சிலர் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எதுவாயினும், "குப்பை கொட்டினால் அபராதம்" என்ற எச்சரிக்கையை விட, "குப்பை கொட்டினால் செய்வினை" என்ற வாசகமே தற்போது இளையான்குடி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த பலகையின் புகைப்படம் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல், உள்ளாட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள குப்பை சேகரிப்பு முறைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share: 1,222 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.