Wed, Aug 05, 2026 08:32 AM

கோவில் கும்பாபிஷேக விழாவில் அரிவாள் வெட்டு: 5 பேர் காயம் குற்றவாளியை கைது செய்யக் கோரி காவல் நிலைய முற்றுகை

Posted by admin on 28-06-2026


கோவில் கும்பாபிஷேக விழாவில் அரிவாள் வெட்டு: 5 பேர் காயம்    குற்றவாளியை கைது செய்யக் கோரி காவல் நிலைய முற்றுகை

கோவில் கும்பாபிஷேக விழாவில் அரிவாள் வெட்டு: 5 பேர் காயம் – முக்கிய குற்றவாளியை கைது செய்ய கோரி காவல் நிலைய முற்றுகை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தென்படுக்கை கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகத் திருவிழாவைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்த நிலையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியை கைது செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையான்குடி அருகே தென்படுக்கை கிராமத்தில் உள்ள பச்சாயி அம்மன் – ரங்கநாத பெருமாள் கோவிலில் இரண்டு நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி இரவு கலையரங்கத்தில் நாடக நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அப்போது கிராமத்தைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் நடனமாடியதாலும், ஒலிபெருக்கி கம்பி (வயர்) துண்டிக்கப்பட்டதாக கூறப்படுவதாலும் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட பிரச்சனையில் ரங்கநாதன் என்பவர் தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்து அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அருண் மற்றும் அதிவீர ராஜதுரை உள்ளிட்ட சிலர் அங்கிருந்தவர்களை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் தினேஷ், இளங்கோ, ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். இதில் ரங்கநாதன் மற்றும் தினேஷ் ஆகியோர் பலத்த காயங்களுடன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக சாலைகிராமம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிவீர ராஜதுரை மற்றும் ஜெய் ஸ்ரீதரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

ஆனால், இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் அருணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலைகிராமம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து தென்படுக்கை கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share: 1,006 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.