Posted by admin on 10-06-2026
சிவகங்கை மாவட்டம் ,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி, துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் -
மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவுமைப்பு உற்பத்தி (Diploma in Textile Industry Course) மற்றும் துணிகளுக்கு சாயம், ஒவியம் மற்றும் அச்சிடுதல் (Certificate in Textile Painting, Dyeing & Printing Course) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு நான்கு மாதங்கள் ஆகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளதால் தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
மேலும், இப்பயிற்சியில் முழுமையாக முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.50,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
Leave a Comment
Your comment will be visible after admin approval.